tamilnadu

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

நெல்லை களக்காட்டில் சூறைக்காற்று 2 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்

திருநெல்வேலி, மே 18 -நெல்லை மாவட்டத்தில் கோடை காலம்தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்தது. கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து வருவதால் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல இடங்களில் மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. அதே போல் சூறைக்காற்று மற்றும்இடி-மின்னலுடன் மழை பெய்தது. நெல்லை,பாளை, செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, கடையம், களக்காடு உள்ளிட்ட பல பகுதியில் மழை கொட்டியது. பாபநாசம் கீழ்அணை பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.சூறாவளி காற்று காரணமாக பாளை சாந்திநகர் பகுதியில் ஏராளமான மரம் மற்றும்மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாந்திநகர், சீனிவாசநகர், வி.எம்.சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு வரை மின்தடை ஏற்பட்டது. களக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கத்திரி வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீர் என இடி, மின்னலுடன் கோடைமழை கொட்டியது. சூறை காற்றினால் களக்காடு அருகே சிதம்பரபுரம் பழங்குளத்து பகுதியில் பயிர்செய்யப்பட்டிருந்த 2 ஆயிரம் வாழை மரங்கள்முறிந்து சேதமாயின. இந்த வாழைகள் சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயி சங்கருக்கு சொந்தமானது. குலை தள்ளிய நிலையில் வாழைகள் நாசமானதால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் வீசிய சூறை காற்றினால் இப்பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. சாய்ந்த வாழைகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.இந்நிலையில் மீண்டும் சூறை காற்றினால் வாழைகள் சேதமடைந்துள்ளன. எனவேசூறைக்காற்றினால் நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருப்பாநதி அணை வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருநெல்வேலி, மே 18 -கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பாநதி அணை வறண்டுள்ளதால், பல்வேறு பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியின் மொத்த பரப்பு 52.25 சதுர கிலோ மீட்டர். தற்போதைய நிலையில் இங்குள்ள மக்கள் தொகை 90,100. 13,950 குடிநீர் இணைப்புகள் உள்ளன.1973 முதல் கருப்பாநதி அணைக்கட்டு திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் கடையநல்லூர் நகரப் பகுதியில் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், 2003-ம் ஆண்டு தாமிரபணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கடையநல்லூரில் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த இரண்டு திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சுமார்68 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும்.இதற்கிடையே மழை பொய்த்து விட்ட நிலையில், கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. இதனால் கருப்பாநதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. அணை வறண்டு பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.இந்த சூழலில் கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீர் பெறும் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கடையநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், முத்துசாமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடையநல்லூர் நகராட்சியைப் பொறுத்தவரை தாமிரபரணி திட்டம் மூலம் கிடைக்கும் குடிநீர் மற்றும் நகராட்சி மூலம் கல்லாற்றுப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள கிணறுகள் மூலம் குடிநீர் பெறப்பட்டு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


வெடி விபத்து : மேலும் ஒருவர் பலி

திருநெல்வேலி, மே 18-நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே வரகனூரில்ஏற்கெனவே வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை அருகேதனியார் நிலத்தில் கருவேல மரங்களை வெட்டும் பணி கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அங்கு சமையல் செய்தபோது, காற்றில் தீப்பொறி பரவி, சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலைஅறையில் விழுந்ததில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், கோபால், குருசாமி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாங்குடியைச் சேர்ந்த கனகராஜ் (46) என்பவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதையடுத்து வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 


ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் : அனைத்துப் பணிகளும் தயார்

தூத்துக்குடி, மே 18-தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19 (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தொகுதியில் 257 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப்பதிவுக்கு தேவையான 350 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உரிய பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.