tamilnadu

தஞ்சையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைகளை சரிசெய்ய ஒரு மாதம் அவகாசம்

தஞ்சாவூர், மே 15 -தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில், தமிழ்நாடு அரசு சிறப்பு விதிகளின் படி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆய்வுப் பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார். இதில் 49 பள்ளிகளைச் சேர்ந்த 252 வாகனங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 15 வாகனங்களில் குறைபாடுகள் காணப்பட்டதால், அதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு, குறைகளை சரி செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆய்வின்போது அவசர கால வழி, தீயணைக்கும் கருவி, இருக்கைகள், வாகனத்தின் வேக அளவு, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் எம்.இளஞ்செழியன் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும், சாலை விபத்து ஏற்பட்டால் எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் சார்பில் விஜயபாஸ்கரும் விளக்கம் அளித்தனர். அனைத்து ஓட்டுநர்களும் சாலை விதிகளை மதித்து, விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்குமாறு துணைப் போக்குவரத்து ஆணையர் எஸ்.உதயகுமார் அறிவுறுத்தினார். 

பட்டுக்கோட்டை 

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களைச் சேர்ந்த 39 தனியார் பள்ளிகளின் 267 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஆய்வில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன், பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சின்னையன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். ஆய்வு முடிவில் 4 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதோடு, அந்த வாகனங்களின் தகுதிச் சான்றை, தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்து, மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.