tamilnadu

img

சிறுவன் சுஜித் உடல் சடலமாக மீட்பு

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்  உடல் சடலமாக மீட்கப்பட்டு இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சுஜித் குழிக்குள் விழுந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிகள் பயனளிக்காமல் போனது. அதோடு 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை சுஜித், 88 அடிக்கும் கீழ் சென்றான். அதனால் துளையிடும் அதிநவீன ரிக் இயந்திரங்கள், போர்வெல் மூலம் மீட்புப் பணி நடைபெற்று வந்தது.
4 நாட்களாக இரவு, பகலாக நடந்த மீட்புப் பணிகள் நடைபெற்றது.  பாறைகள் குறுக்கிட்டதால் வேகமாக குழி தோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.மீட்புப்பணிகள் மிகுந்த சவாலாக இருந்தது. படிமப் பாறைகளை ரிக்கிங் எந்திரம் மூலம் அறுத்தெடுத்தாலும், கடினப் பாறைகளை அறுத்து எடுப்பது என்பது மிகக் கடினமாக இருந்தது.
55 அடி வரை ரிக் இயந்திரங்கள் மூலம் குழி தோண்டப்பட்ட பிறகு நேற்று காலை முதல் போர்வெல் மூலம் துளையிடும் பணி நடைபெற்றது. இதையடுத்து குழிக்குள் இருக்கும் ஆக்ஸிஜனை ஆய்வு செய்யவும், பாறைகளின் தன்மை குறித்து ஆராயவும் தீயணைப்பு வீரர் திலிப்குமார் 55 அடி ஆழ துளையில் ஏணி மூலமாக இறங்கினார். சில நிமிடங்களுக்கு பிறகு மேலே வந்த திலிப்குமார், உள்ளே உடைபட்ட பாறைகளின் பாகங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ரிக் இயந்திரத்தில் தோண்டப்பட்ட குழியில் மீண்டும் போர்வெல் இயந்திரத்தால் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. 82 மணிநேரத்திற்கும் மேலாக 61 அடிக்கு குழி தோண்டப்பட்ட நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு பிறகு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், குழந்தை சுஜித் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் நடுகாட்டப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சுர்ஜித் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பாத்திமா புதூரில் உள்ள கல்லறையில் சிறுவன் சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.