தஞ்சாவூர், மே 18-தஞ்சாவூர் அருகே சுமார் 600 ஆண்டுகளாக மெலட்டூரில் நடைபெறும் பாகவத மேளா நாடகம்வெள்ளிக்கிழமை இரவு பாரம்பரிய மிக்க விளக்கொளியில் தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் ஏராளமான இசைக்கலைஞர்கள் வாழ்ந்தனர். இவர்கள் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களுக்கு தமிழை தாய்மொழியாக கொண்ட ஆண்கள், இதிகாச நாயகர்கள், நாயகிகள் போல்வேடமணிந்து மேடையில் தோன்றி நடிக்கும் இந்த பாணி நாடகத்துக்கு “பாகவத மேளா நாடகம்” எனப்படும். இந்த நாடகங்கள் ஒருவார காலத்துக்கு இரவு நேரங்களில் நடைபெறும். எண்ணெய் விளக்கு திரிகளால் ஏற்றப்பட்ட விளக்கொளியின் பின்னணியில் இந்த நாடகம் அரங்கேறும்.சாலிய மங்கலம், மெலட்டூர், தேப்பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த பாகவத மேளா நாடகம் இன்றளவும் நடைபெறுகிறது. மெலட்டூரில் சுமார் 600 ஆண்டுக்கும் மேலாக இந்த பாகவதமேளா நடைபெற்று வருகிறது. மெலட்டூரில் உள்ள லெட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நரசிம்ம ஜெயந்தி விழாவில் இந்த பாகவத மேளா நாடகம் அரங்கேறும்.இந்த விழாவில் பங்கேற்பதற்காக மெலட்டூரை பூர்வீகமாக கொண்டவர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்கள் இந்த ஒரு வார காலமும் சொந்த ஊருக்கு வந்து இவ்விழாவில் பங்கேற்பதை இன்னமும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பிரபல பாகவத மேளாநாடக கர்த்தா வெங்கட்ராம சாஸ்திரியின் ஆந்திர மொழியில் இயற்றப்பட்ட சரித்திர நாடகங்கள், மெலட்டூர் பாகவத மேளா நாடகநடிகர்களை கொண்டு வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக டிரஸ்ட் மூலம் தொடங்கிய இந்த விழாவுக்கு டிரஸ்ட்டின் தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் வரவேற்றார். சென்னை கலாஷேத்ரா பவுண்டேசன் இயக்குநர் ரேவதிராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். சென்னை கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் செயலாளர் சேகர், ஜோதிடர் ஆர்.குமரேசன், மெலட்டூர் முதுபெரும் நாடக கலைஞர் ராமஸ்சுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் மெலட்டூர் வெங்கட்ராம சாஸ்திரி விருதினைஆந்திரா மாநிலம் ஏழுரு, குச்சுப்புடிகலைஞர் கே.வி.சத்தியநாராயணா, பரதம் விருதினை நட்டுவாங்கவித்வான் ஹரிஹர ஹேரம்பநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரகலாத சரித்திர நாட்டிய நாடகம் பாரம்பரிய விளக்கொளியில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் பரத நாட்டியநிகழ்ச்சிகளும், 20, 21 ஆம் தேதிகளில் இரவு 10 மணிக்கு அரிச்சந்திரா பாகவத மேளா நாடகமும், 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணமும், ஆஞ்சநேயர் வழிபாடும் நடைபெறவுள்ளது.