tamilnadu

தஞ்சாவூர் ,திருச்சி முக்கிய செய்திகள்

பயணியர் நிழற்குடை திறப்பு

தஞ்சாவூர் ஜூலை.25- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிழ ற்குடை சேதமடைந்த நிலையில் இரு ந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம்  தேதி வீசிய கஜா புயலில் முற்றிலுமாக சேதமடைந்து கீழே விழுந்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், முதி யோர் வெயில், மழைக்கு ஒதுங்க இட மின்றி தவித்தனர்.  இதனைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தீக்கதிர் உள்ளிட்ட பல்வேறு நாளி தழ்களில் செய்தி வெளியானது. இதை யடுத்து, சட்டமன்ற உறுப்பினர் மா.கோ விந்தராசு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில்  (2018-19) இருந்து, ரூ 7.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து வியாழக்கிழமை அன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோ.செல்வம், சடையப்பன் மற்றும் ஆர்.கே.பி.குமார், எஸ்.ஆர்.லெட்சுமி, தனக்கப்பன், கொன்றை கணேசன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

ஏவிசி கல்லூரி தேர்வு முடிவுகள்
மயிலாடுதுறை, ஜூலை,25- மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கடந்த ஜுன் மாதம் நடந்த பருவத் துணைத்தேர்வு முடிவுகள் 27 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்படும் என கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தெரிவித்துள்ளார். பருவத் துணைத்தேர்வு  முடிவுகளை www.avccollege.net என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.


மணல் கடத்தல்: இருவர் கைது
முசிறி, ஜூலை.25- முசிறி அடுத்த ஏவூர் விஏஓவாக வேலை பார்த்து வருபவர் குருமூர்த்தி. இவர் ஏவூர் அரவாயி அம்மன் கோவில் அருகே வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளார். ஆட்டோவில் திருட்டு மணல் மூட்டைகள் இருந்துள்ளது. அப்போது லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் விஏஓவை தகாத வார்த்தைகளால் திட்டி பணிசெய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடினர். இதையடுத்து விஏஓ குருமூர்த்தி மணல்மூட்டைகளை ஏற்றிவந்த லோடு ஆட்டோவை கைப்பற்றி முசிறி காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். புகாரின்பேரில் முசிறி காவல்துறையினர் வழக்குபதிந்து சேந்தமாங்குடியை சேர்ந்த சதீஷ் (32), மகேந்திரன் (34) ஆகியோரை கைது செய்து தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர். 
 

போலி பாஸ்போர்ட்: ஒருவர் கைது
திருச்சிராப்பள்ளி,ஜூலை,25- மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு புதனன்று விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பாஸ்போர்ட்டை வாங்கி அதிகாரிகள் பரிசோதனை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். மேலும் அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்ததால் தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்ததில் அவர் பெயர் திகர்சிங்(25) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் வைத்திருந்த பாஸ்போர்ட் போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விமான நிலைய காவலர்களிடம் ஒப்படைத்தனர்.