tamilnadu

img

பாடங்களை கலைப் படைப்பாகத் தரும் ஆசிரியர்களே மாணவர்களின் மனம் கவர முடியும்

புதுக்கோட்டை, மே 31- எந்தப் பாடமானாலும் அதை கலைப்படைப்பாகத் தரும் ஆசிரியர்களே மாணவர்களின் மனம்கவர முடியும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன். உடற்கல்வி இயக்குநர்கள் நா.விஜயரெகுநாதன், வி.ராஜசரோ ஆகியோர் இணைந்து எழுதிய “யோகாவும் உடல்நலமும்” எனும் நூலை வெளியிட்டு செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் அவர் பேசியது:தனது துறைசார்ந்த அறிவை எளிய முறையில் விளக்கி நூலாக்கித்  தந்திருக்கும் முனைவர் நா. விஜய ரகுநாதன் மிகுந்த பாராட்டிற்குரியவர். அதோடு, யோகா என்பது ஏதோ ஒரு மதத்திற்கு மட்டுமே சொந்தமான கலை என்பது போன்ற தோற்றம் நம் நாட்டில் கட்டப்பட்டுள்ளது. அதை மீறி, இந்நூலாசிரியர் பௌத்த மதம், சமண மதம் சார்ந்த அறிஞர்களும் திருமூலர் போலும் சித்தர்களும் எப்படி யோகாவை வளர்த்துள்ளனர் என்பதை நூலில் விளக்கியிருப்பது சிறப்புடையது. எந்தப் பாடமானாலும் கலைப்படைப்பாக அதனை மாணவர்க்குத் தரும் ஆசிரியரே மாணவர் மனம்கவர்ந்து தமது கற்பித்தலில் வெற்றிபெற முடியும்! பாடங்கள் தாண்டியும் படைப்பிலக்கிய உணர்வோடு நூல்கள் கொண்டுவரும் ஆசிரியர் பாட ஆசிரியராக மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்குமான சமூகத்தின் ஆசிரியர் எனும் பெருமையைப் பெறுகிறார் எனப் பேசினார். விழாவுக்கு ரோட்டரித் தலைவர் கே.திருப்பதி தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார். முனைவர் தா.மணி முதல்பிரதியை பெற்றுக்கொண்டார். ஆயுள் காப்பீட்டுக் கழக வளர்ச்சி அதிகாரி நா.விஜயகுமார், ஆனந்த யோகா பவுண்டேசன் யோகா செல்வராஜ், கவிஞர் எஸ்.இளங்கோ உள்ளிட்டோர் பேசினர்.