சீர்காழி, செப்.20- சீர்காழி அருகே அரை குறையாக விடப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்திலிருந்து செருகுடி வரை ஒரு கிமீ தூரத்துக்கு பிரதம மந்திரியின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்தும் பணி துவங்கி நடைபெற்றது. ஆனால் சாலை பணி முழுவதும் நிறைவடையாமல் துவக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் சாலையில் பள்ளம் இருப்பதால் சில தினங்களாக பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. சாலை மேம்படுத்தும் பணி துவக்க நிலையிலேயே முழுமை பெறாமல் அரை குறையாக நிறுத்தப்பட்டதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பள்ளி மாணவர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பெண்களும் சிரமம் அடைகின்றனர். ஓதவந்தான்குடியிலிருந்து செருகுடி செல்லும் சாலை மேம்படுத்தும் பணி துவங்கி நிலையிலேயே நிறுத்தப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் மேற்கொண்டு சாலை பணியை துவக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலைப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முழுமையும் சாலை மேம்படுத்தாமலயே முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செருகுடி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.