tamilnadu

img

மடிக்கணினி வழங்கக் கோரி கல்வி அலுவலரிடம் மாணவர்கள் மனு

கும்பகோணம், ஜூலை 5- கடந்த 2017-18, 2018-19 ஆகிய கல்வியாண்டில் வழங்க வேண்டிய இலவச மடிக்கணினியை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும் என கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் நகரச் செயலாளர் எஸ்.பிரபாகரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் பா.பாலகுரு, மாவட்டக் குழு உறுப்பினர் விக்னேஷ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.  இதுகுறித்து மாவட்டத் தலைவர் பாலகுரு கூறுகையில், தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ள மாணவர்களுக்கு இலவச  மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 2017-18, 2018-19 ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை.  தற்போது படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்கப்பட்டு வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கு  வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. ஆகையால் உடனே முன்னாள்  மாணவர்களுக்கு உரிய காலத்தில் மடிக்கணினி வழங்கவில்லை என்றால், கும்பகோணத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.

தரங்கம்பாடி - மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், ஆக்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 2017-18, 2018-19 ஆகிய கல்வியாண்டில் வழங்க வேண்டிய இலவச மடிக்கணினியை இதுவரை வழங்காத நிலையில், நடப்பாண்டில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கியுள்ளனர். பள்ளி படிப்பை முடித்து சென்ற மாணவர்களுக்கும் உடனடியாக வழங்கிடக் கோரி ஆக்கூர் கடைத்தெருவில்  மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ தலைமையில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ஐயப்பன், துணைச்செயலாளர் குமரேசன், கபிலன், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாணவர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவராமன், பள்ளி நிர்வாகி பிரவீன் மாவட்டத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி உரையாற்றினர்.