புதுக்கோட்டை, ஜூலை 11- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. முழுக்க, முழுக்க மாணவர்கள் மட்டுமே பங்கு பெற்று வேட்பாளர்களாகவும், வாக்காளர்களாகவும், தேர்தல் நடத்தும் அலுவலர்களாகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்க்கான தலைவர் பதவிக்கு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் என். வெங்கடேஸ்வரன், பி. முத்துவடிவேல், ஆர்.மணிமாறன் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிக்கு எட்டாம் வகுப்பு பயிலும் சண்முகப்பிரி யன், அத்வைத் சதானந்த், ரீகரன் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு தனித்தனியே சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் கமிட்டி உறுப்பினர்களாக எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த பன்னிரெண்டு மாணவர்கள் பெயர்ப் பதிவு மற்றும் ஆளறிச் சான்றிதழ்களை சரிபார்த்தல், விரல் மை வைத்தல், வாக்குச் சீட்டுகளை மாணவர்களுக்கு வழங்குதல் ஆகிய தேர்தல் பணி யாற்றினர். வாக்குச்சாவடி பாதுகாப்புப் பணிகளில் பள்ளியின் சாரணர் இயக்க மாணவர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து கவிஞர் தங்கம்மூர்த்தி பேசும்போது, நாளைய தலைமுறைக்கு நேர்மையான தேர்தல் முறையை அறிமுகம் செய்திட இது உதவும். உடன் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து அவரவர் ஆற்றப்போகும் பணிகளை பட்டியலிட்டு வாக்குகள் சேகரித்தனர். நின்று நிதானித்து கண்காணித்ததில் அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது என்றார். தேர்தல் முடிவடைந்தவுடன் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பள்ளியின் தனி அறையில் வைத்து பூட்டப்பட்டது. வரும் திங்க ளன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறி விக்கப்படவுள்ளதாக தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.