குடவாசல், செப்.27- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பாக 2017- 2018 ஆண்டுக்கான இன்சூரன்ஸ் தொகை வழங்கிட கோரியும், இந்தாண்டு கூட்டுறவு வங்கியில் நிபந்தனையின்றி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கிட வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக உரம், விதை,பூச்சி மருந்து மற்றும் விவசாயிக்கு தேவையான இடுபொருள்கள் அனைத்தும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகரச் செயலாளர் சீனி. ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம், பி.ஸ்டாலின், ஆர்.சுந்தரமூர்த்தி, வரத.வசந்தராஜன், எம்.இராமமூர்த்தி மற்றும் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் வி.நடராஜன், தங்கராசு, எ.சங்கர், தனம் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக பேரளம் கடைவீதியில் நாகை மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின் கைதை கண்டித்து கே.எம்.லிங்கம் தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.