tamilnadu

img

கடைமடைப் பகுதி ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் : சிபிஎம் வலியுறுத்தல்

தஞ்சாவூர் ஜூன்.7- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் வருவாய் தீர்வாய முகாம் நிறைவடைந்தது. வருவாய் தீர்வாயம் கணக்கு தணிக்கை (ஜமாபந்தி) நிறைவு நாள் முகாமிற்கு முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியரும், வருவாய் தீர்வாய அலுவலருமான அ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீ.கருப்பையா பேசுகை‌யி‌ல், கடைமடைப் பகுதிகளில் உள்ள ஆறு, வாய்க்கால், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படவில்லை. ஆனால் தூர்வாரப்பட்டதாக, மராமத்து செய்யப்பட்டதாக பொய்யான கணக்குகள் காட்டப்படுகின்றன. ஆனந்தவல்லி வாய்க்காலில் சாக்கடை கழிவுகள் விடப்பட்டு, நோய் பரப்பும் இடமாக மாறி விட்டது.

அரசு மருத்துவமனையில் பாம்புக்கடி, வெறிநாய் கடி மருந்துகள் இல்லை. சிகிச்சைக்காக வருபவர்களை பட்டுக்கோட்டை, தஞ்சாவூருக்கு திருப்பி அனுப்புகின்றனர். மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தேவையான மருந்துகளை வழங்க வேண்டும். பேராவூரணி நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.  பேரூராட்சி பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும். அரசுப் போக்குவரத்து பேருந்து வசதியை அனைத்து பகுதிகளுக்கும் ஏற்படுத்தி தரவேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை தொடங்கி, சட்டபூர்வ கூலியை வழங்க வேண்டும். ஜமாபந்தியை வெறும் கண்துடைப்பாக இல்லாமல், பொதுமக்களின் கோரிக்கைக்கு பலனளிப்பதாக அமைய வேண்டும்" என்றார். 

விவசாயிகள் கே.ஆர்.புரம் சீனிவாசன், பெருமகளுர் ஜெயச்சந்திரன், மணக்காடு ஆறுமுகம், உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மேலும் பொதுமக்கள் கூறுகையில், பெருமகளுர் பகுதியில் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை முழுமையாக வழங்கவில்லை, 100 நாள் வேலை மீண்டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தினர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி அளித்த கோரிக்கை மனுவில், பேராவூரணி வட்டம் ஆனால் பெரியநாயகிபுரம் கிராமத்தில் புல எண் 285 புஞ்சை தரிசை, நத்தமாக வகைமாற்றம் செய்து, வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.  நான்கு நாட்கள் நடைபெற்ற முகாமில் மொத்தம் 400 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 50 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.