திருச்சிராப்பள்ளி, அக்.31- மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. திருச்சி மண்டலத்தில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா கல்யாண மண்டபத்தில் வரும் 8 ஆம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது. டிசம்பர் 2 வது வாரத்தில் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வேன் பிரச்சாரம் செய்வது. தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வேலை நிறுத்த விளக்க துண்டுப் பிரசுரம் கொடுத்து ஆதரவு திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் சிஐடியு ராஜேந்திரன், எல்பிஎப் சிவபெருமாள், குணசேகரன், ஏஐடியுசி மணி, சுரேஷ், எச்எம்எஸ் ஐசக்ஜான்சன், ஏஐசிசிடியு தேசிகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.