சீர்காழி, ஜூன் 24- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் 500 கிராமங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 20 கிமீ தூரத்திற்கு கடல்நீர் உள்புகுந்து விட்டது. கடந்த 20 ஆண்டு காலமாக மழை பொழிவு குறைந்து போனதாலும், மேட்டூரிலி ருந்து தண்ணீர் வரத்து குறைந்து விட்டதாலும், கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் புகுந்து விட்டது. கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து அரசு சார்பில் இயங்கி வந்த மணல் குவாரியும் உப்பு நீர் ஆற்றில் புகுவதற்கு காரண மாக அமைந்து விட்டது. இதனால் ஆற்றின் இரண்டு கரை யோரங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி விட்டது.
சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பயிர் செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகி விட்டது. கரையிலிருந்து 5 கிமீ தூரத்துக்கு உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி விட்டதால் கடைமடை பகுதியான கொள்ளிடம் பகுதி கிராமங்களில் தற்போது குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொள்ளிடம் விவசாயிகள் சங்க கூட்ட மைப்பு தலைவர் சிவப்பிரகாசம்பிள்ளை கூறுகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கொள்ளிடம் சோத னைச்சாவடி அருகே அளக்குடி கிராமம் வரை கடல்நீர் உள்புகாதவாறு தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர் மேலும் உப்பு நீராக மாறுவதை தடுக்க முடியும்.
மேலும் 500 கிராமங்களின் குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்யவும், சுமார் 25,000 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களை தொடர்ந்து பாதுகாக்கவும் முடியும். ஆனால் அதி காரிகள் கடந்த 5 ஆண்டுகளாக கொள்ளிடம் ஆற்றிற்கு வந்து பலமுறை பார்வையிட்டு தடுப்பனை கட்டுவதாக அறிவித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், விவசாயத்தை செழிக்க செய்யவும் உடனடியாக ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.