தஞ்சாவூர்: திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில் பாதை உபயோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம், திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ப.பாஸ்கரன், உறுப்பினர் மு.பாரதிதாசன், முத்துப்பேட்டை இரயில் உபயோகிப்போர் சங்க அமைப்பாளர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோர், வியாழனன்று, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தேசிய இரயில் பயணிகள் சேவைக் குழுவின் தலைவர் ரமேஷ் சந்திர ரட்டன் மற்றும் உறுப்பினர்கள் எம்.என். சுந்தர், வெங்கட்ரமணி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அம்மனுவில், ‘திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி மார்க்கத்தில் உடனடியாக போதுமான அளவிற்கு கேட்கீப்பர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலின் பயண நேரத்தை ஆறரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக குறைக்க வேண்டும் உள்ளிட்டவை கூறப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட தேசிய ரயில் பயணிகள் சேவை குழுவின் தலைவர், “கோரிக்கைகள் புதுதில்லியில் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்” என்று உறுதியளித்தார்.