tamilnadu

img

உப்பனாறு பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

தரங்கம்பாடி, ஆக.30- தரங்கம்பாடி அருகே பொறையாரில் உப்பனாற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணி மிக தாமதமாக ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நாகை மாவட்டம் பொறையார் நகரையும், காத்தான்சாவடி பகுதியையும் இணைக்கும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கை மற்றும் தீக்கதிரில் விரிவான செய்தி படங்களுடன் வெளியானதையடுத்து ரூ.2.50 கோடி மதிப்பில் கடந்த மார்ச் 1-ம் தேதி புதிய பாலம் கட்டுவதற்கான பணி துவங்கியது.  பழைய பாலம் முழுமையாக இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய பாலப் பணிகள் முதற்கட்டமாக துவங்கியது. ஆனால் தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் பல மாதங்களாக நிறுத்தப்பட்டு கிடக்கிறது. மாற்றுச் சாலை முறையாக அமைக்கப்படாமல் கட்டுமான ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் காட்டி வருவதால் மேடு, பள்ளங்களில் வாகனங்களால் வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  இப்பணிகள் துவங்கி 6 மாதங்களாகியும் ஆரம்பக் கட்ட பணி கூட இன்னும் முடிந்தபாடில்லை. மாற்றுப் பாதையையாவது முறையாக அமைக்காமல் அவசர கதியில் பணிகளை துவங்கி தற்போது பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். உடனடியாக மாற்றுப் பாதையை முறையாக அமைப்பதோடு, பாலத்தின் கட்டுமான பணியை துரிதமாக முடிக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த தேவசகாயம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.