தஞ்சாவூர், ஜூன் 5- தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் ஏ.தாஜூதீன் தலைமை வகித்தார். தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ், ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்க செயலாளர் ஜே.சு.ராஜா, மண்டபம் மீனவர் சங்கங்களின் தலைவர்கள் ஜாகிர் உசேன், பாலசுப்பிரமணியன், இராமநாதபுரம் வடக்கு மீனவர் கூட்டமைப்பு நிர்வாகி சோழியக்குடி கோபி, புதுகை மீனவர் சங்க நிர்வாகிகள் கோட்டைப்பட்டினம் சின்ன அடைக்கலம், ஜெகதாப்பட்டினம் பாலமுருகன், தஞ்சை மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சை, புதுகை, ராமநாதபுரம் கடல் பகுதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, விசைப்படகுகள் வாரத்தில் மூன்று நாட்களும், நாட்டுப் படகுகளுக்கு நான்கு நாட்களும் கடலுக்கு சென்று தொழில் செய்வது என கடந்த 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை மீறி நாட்டுப் படகு மீனவர்கள் எல்லா நாட்களிலும் தொழில் புரிவதால், விசைப்படகு மீனவர்களுக்கு தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஒப்பந்தத்தை மாற்றியமைத்து விசைப்படகுகள் தங்கு கடல் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்களை வட்டியில்லாமல் வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். மீனவர் வாழ்வு மேம்பட சரக்குகளை பாதுகாத்து வைத்து, முறையாக சந்தைப்படுத்திட ஏதுவாக குளிர்பதன கிடங்குகள் அமைத்து தர வேண்டும். மல்லிபட்டினம் புதிய துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். பொருளாதார பிரச்னை, தொழிலாளர் தட்டுப்பாடு, உபகரணங்கள் கிடைக்காதது ஆகியவற்றால் படகுகள் மராமத்து பணியில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பணிகள் முடித்து வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.