திருச்சிராப்பள்ளி, மே 12- தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், ஸ்ரீரங்கம் முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் செவ்வாய் அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊரடங்கு உத்தரவால் கடந்த 48 நாட்களாக சலூன்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வருமானம் இல்லாமல் வங்கி கடன், கடை வாடகை, வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவிற்கு கூட கையில் காசு இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் அரசு சொல்லும் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க தயாராக உள்ளோம். எங்களது வாழ்வாதாரமான சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். நலவாரியத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கும் இதுவரை நிவாரண தொகை கிடைக்கவில்லை. எனவே தகுதியுள்ள அனைவருக்கும் நிவாரண தொகை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயலாளர் ராஜலிங்கம், பொருளாளர் சங்கர், துணைத்தலைவர் ரஞ்சித், ஆதவாஜீவா, பிராபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.