தஞ்சாவூர் செப்.20- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம் சார்பில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை மறுசீரமைப்பு துவக்க விழா நடந்தது. தலைமையாசிரியர் கருணாநிதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அடைக்கலம், பொருளாளர் வீரசிங்கம், துணைத்தலைவர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார அமைப்புகள் சேதம் அடைந்தன. அதன் பாதிப்புகளை கிராமாலயா தொண்டு நிறுவனத்தினர் கணக்கெடுப்பு செய்து, மும்பை என்.எஸ்.இ. பவுண்டேஷன் நிதி நிறுவனத்தின் உதவியுடன், கிராமாலயா நிறுவனர் தாமோதரன் வழிகாட்டுதலின் பேரில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார மறுசீரமைப்பு செய்து கொடுக்க முன் வந்தது. இதில் மாவட்டத்தில் 18 அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் வசதிகளுடன் கூடிய நவீன கழிவறை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ரூ 3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மறு சீரமைப்பு நிகழ்வு துவங்கும் பணி நடைபெற்றது. மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக சார்பில் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்தில் மதிப்பில் 900 மீட்டர் தூரத்திற்கு முள்வேலி அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், தொழில்நுட்ப அலுலர்கள் சிவனேசன், ஜெயக்குமார், கோபி, ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.