தரங்கம்பாடி, பிப்.7- நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் நடைபெற்றது. ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்காதே என முழக்கமிட்டும், திட்டத்தை கைவிடக் கோரியும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா உரையாற்றினார். மாநிலத் தலைவர் எஸ். ரெஜீஸ்குமார், மாவட்டத் தலைவர் சிவக்குமார், மயிலாடுதுறை வட்டச் செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக கேணிக்கரையில் துவங்கி விஜயா தியேட்டர் அருகே நிறைவடைந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணை தலைவர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார். பேரணியை முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மாநில நிர்வாகிகள், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஸ்டாலின் நன்றி கூறினார்.