குளித்தலை, மே 15 -பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்து வோருக்கு அபராதமும், காகித பைகளை பயன்படுத்துவோரை பாராட்டி மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பளிப்பும் வழங்கினார்.கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பணிக்கம்பட்டி, நடுப்பட்டி, மேட்டுமருதூர், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடை, டீ கடை, பேக்கரி, ஹோட்டல், இறைச்சி கடை என பல்வேறு வியாபார கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ச.ஹரிராம மூர்த்தி தலைமையில் இளநிலை உதவியாளர் சேட்டு, பொதுசுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.செயல் அலுவலர் நேரிடையாக கடைகளுக்குள் சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அதற்கு உடனடியாக ரூ.100, ரூ.200 என அபராதம் விதித்தார். பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து அறிவுரைகள் வழங்கியும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும் நடவடிக்கை மேற்கொண்டார்.மேலும் நடுப்பட்டி பாலம் அருகே ஜமால் முகமது என்பவரது மளிகை கடையில் சோதனை மேற்கொண்டபோது பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தவிர்க்கப்பட்டு காகிதப் பைகள் பயன்படுத்தி வருவதை கண்ட பேரூராட்சி செயல் அலுவலர் ச.ஹரிராம மூர்த்தி அவரை பாராட்டி ரூ.100 அன்பளிப்பு வழங்கினார்.