tamilnadu

img

பழுதடைந்த வீடுகளில் தினம் அச்சத்துடன் வசிக்கும் அருந்ததிய மக்கள்

குளித்தலை, செப்.20-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தனர்.  அம்மனுவில் கூறியிருப்பதாவது, குளித்தலை வட்டம் இனுங்கூர் ஊராட்சி பகுதியில் அருந்ததியர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தங்களுக்கு 1982 ஆம் ஆண்டு பிஆர்ஓ தொண்டு நிறுவனம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. சுமார் 35 ஆண்டுக்கும் மேலாக அந்த வீடுகளில் வசித்து வருகிறோம். தற்சமயம் அந்த வீடுகள் பழுதடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்தும் மிகவும் பழுதடைந்துள்ளது. வீட்டில் குடியிருக்க முடியாத அவல நிலையில் இரவு நேரங்களில் வீட்டில் தங்க முடியாமல் கைக் குழந்தைகளுடன் பெண்களும் முதியவர்களும் வீதியில் படுத்து உறங்கி வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். எனவே இந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித் தர கூறி பல முறை சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தாங்கள் அருந்ததிய சமூக மக்கள் என்பதாலோ எங்கள் கோரிக்கையை தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது.  மிகவும் பழுதடைந்த வீட்டில் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தோடு தினம் தினம் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றோம். ஆகவே எங்களை பாதுகாக்க இடஒதுக்கீடு செய்து புதிய வீடுகள் கட்டி கொடுத்து அரசு எங்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.  இந்நிகழ்வுக்கு, வைரபுரி கிளைச் செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராஜு, மாவட்டக் குழு உறுப்பினர் முத்துசெல்வன், ஒன்றியச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.