tamilnadu

img

தஞ்சையில் இன்று மக்கள் நீதிமன்றம்

தஞ்சாவூர், ஜூலை 12:  தஞ்சாவூர் மாவட்டத்தில்  ஜூலை 13 நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,250 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தஞ்சாவூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பி.ராஜவேல். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மாலை அவர் தெரிவித்தது: தேசிய அளவில் மக்கள் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், வட்ட நீதிமன்றங்களிலும் நடைபெறுகிறது. இதில், நீதிபதிகள் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகளை அழைத்து பேசி சமரச வழி மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படுகிறது. மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,800 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,200 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட நீதிமன்றத்திலும், வட்ட நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படவுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 28,340 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 4,250 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவற்றில் 2,000க்கும் அதிகமான வழக்குகளில் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. தேசிய மக்கள் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்படும் வழக்குகளை அடையாளம் காண்பதற்காக ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீதிபதி தலைமையில் ஊழியர்கள் கொண்ட வழக்குகள் அடையாளம் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவினர், பரிந்துரை செய்யப்படவுள்ள வழக்குகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், சமரசத்துக்குரிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், மண வாழ்க்கை பிரச்னை தொடர்பான வழக்குகள், குடும்ப நல நீதிமன்ற வழக்குகள், தொழிலாளர் ஊதியம், இதர சலுகைகள் தொடர்புடைய வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (சொத்து மாற்றம், பாகப் பிரிவினை, வாடகை, வங்கிக் கடன் வசூல், வாழ்வாதார உரிமைகள்), வருவாய்த் துறை வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது. தீர்வு கிடைத்த பிறகு முத்திரைத்தாள் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றார் நீதிபதி ராஜவேல். மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி, மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான பி. சுதா உடனிருந்தனர்.