அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் தினசரி பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும், கல்லூரி, பள்ளி மாணவ -மாணவிகளும் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போதிய கழிவறை வசதி இல்லை. 15 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டண கழிவறை செயல்படுகிறது. ஆனால் அதுவும் கதவுகளின்றி முறையான பராமரிப்பும் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித ஏற்பாடுகளும் எடுக்கவில்லை. பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேருந்து நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பகம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்க அரியலூர் மாவட்டச் செயலாளர் கே.மகாராஜன், ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.