தஞ்சாவூர் ஜூன்.2-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை ஒன்றியம் சார்பில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். கட்சி ஒன்றியச்செயலாளர் எம்.மாலதி வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், உறுப்பினர் ரசீது வழங்கி தற்போதைய அரசியல் நிலைமைகள், ஹைட்ரோ கார்பன், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தின் பாதிப்புகளை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஞானமாணிக்கம், பி.சங்கிலி முத்து, சௌந்தர்ராஜன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜூன் 4 ஆம் தேதி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்துக் கட்சிகள், அனைத்து இயக்கங்கள் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெற உள்ள போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது, 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பிரச்சார இயக்கத்தை வெற்றிகரமாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.