பொன்னமராவதி, ஜூலை 28- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அலமேலு ஆரம்பப்பள்ளியில் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு -2019 கருத்தரங்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொன்னமராவதி கிளை சார்பில் ஒன்றிய தலைவர் ராம கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சதாசிவம் புதிய கல்வி கொள்கை பற்றி பேசினார். பொன்னமராவதி அறிவியல் இயக்க ஒன்றிய செய லாளர் மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். கருத்தாளராக கவிஞர் முத்துநிலவன் பேசியது, “நாட்டில் எத்தனை மொழிகள் இருக்கின்றதோ அத்தனை கல்விக் கொள்கைகள் இருக்கவேண்டும் மேலை நாடுகளிலும் அப்படித்தான் இருக்கிறது புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியை தனியார்மயம் ஆக்குவதற்காக தான். புதிய கல்விக் கொள்கையின் படி பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் என்.டி.ஏ தேர்வு எழுதினால் தான் மேல்படிப்பு படிக்க முடியும். தேசிய கல்வி கொள்கை என்பது மாநில உரிமையை பாதிக்கிறது இதுவரை இல்லாத அளவில் கல்வி சம்பந்த மான அனைத்து உரிமைகளையும் மத்தியில் குறிப்பது தவறு. நீட் போன்ற தேர்வுகளை எல்லா படிப்புகளுக்கும் கொண்டு வருவது கல்வியை வணிகமயமாக்கும் ஒரு நடவடிக்கையே டீச்சிங்கிற்கு பதில் கோச்சிங் கொண்டுவருவது கல்வியை அழித்துவிடும். சமஸ்கிருதம் ஹிந்தி ஆகிய மொழிகளை முன்னிறுத்துவது மூலமாக இந்துத்துவா கருத்துக்களை திணிக்கும் முயற்சி என மக்களிடத்தில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முத்துகுமார், துணை தலைவர் மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க உறுப்பினர்கள் முத்துசாமி, தேவகுமாரன், மகாலிங்கம், தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.