டாஸ்மாக் ஊழியர் தீ குளித்து சாவு
நாகர்கோவில், மே 26-ஈத்தாமொழி அருகே மணிகட்டிப்பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஷ்வரன் (42). இவர் நாகர்கோவிலில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலைபார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சனியன்று மதியம் வீட்டின் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திக்கிலான் விளை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் உடலில் பெட்ரோலை ஊற்றி லிங்கேஸ்வரன் தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் லிங்கேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈத்தாமொழி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜூன் 1 முதல் ஜூலை 31: கடலில் மீன் பிடிக்க தடை
நாகர்கோவில், மே 26-கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கடற்கரை பகுதியில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் துவங்குகிறது.இதுகுறித்து, குளச்சல் மீன்வள உதவி இயக்குநர் கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் மேற்கு கடல் பகுதிகளில்மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் ஜூன் 1 ஆம் தேதிமுதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மீன்பிடித் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மேற்கு கடற்கரை மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகுகள், இழு வலைப் படகுகள், மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது.இத்தடையைமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டால், படகு உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஏற்கெனவே மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள விசைப்படகுகள், இழுவலைப் படகுகள் மே 31 ஆம் தேதிக்குள் கரைதிரும்ப வேண்டும். விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் விசைப்படகு எங்கு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தினை நேரிலோ, அல்லது தாங்கள் சார்ந்துள்ள சங்கங்கள் மூலமோ, ஊர் நிர்வாகம் மூலமோ மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதையில் சங்பரிவார் மோதல்: பாஜக ஊழியர் பலி; பிஎம்எஸ் ஊழியர் கைது
திருச்சூர், மே 26-கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் பிஎம்எஸ் ஊழியர் ஷிஜு (35). வடக்கேகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாஜக ஊழியர் ரஞ்சித் (31). சங்பாரிவார் அமைப்பைச் சேர்ந்த சிலருடன் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட வியாழனன்று இவர்கள் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். கேரளத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பாஜக தலைவர்கள்தான் காரணம் என ரஞ்சித் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷிஜு ரஞ்சித்தை கூர்மையான கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த ரஞ்சித்தை காப்பாற்ற உடனிருந்த சங்பரிவார் கும்பல் முயற்சிக்கவில்லை. மாறாக ஷிஜுவுடன் அந்த இடத்தைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டனர். தகவல் அறிந்த வடக்கேகாடு காவல்துறையினர் ரஞ்சித்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூ ராய்வு செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து ஷிஜுவை கைது செய்தனர். ரஞ்சித்தின் உடம்பில் பலத்த காயங்கள் இருந்ததால் ஒன்றுக்கு மேற்பட்டோர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
சாலை விபத்தில் சிறைக்காவலர் மரணம்
தூத்துக்குடி, மே 26தூத்துக்குடி மாவட்டம் மேலக்கூட்டுடன்காடு கீழத் தெருவை சேர்ந்த சங்கரவேலு மகன் மகாராஜா மற்றும் அதே ஊரைச் சார்ந்த முத்துராஜ் ஆகிய இருவரும் பெரும்பாலையில் சிறை காவலர்களாக பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் மே 26 அன்று பணி முடிந்து மகாராஜா தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் சாலையோரத்தில் அமைந்திருந்த திண்டில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகாராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் முத்துராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.