சீர்காழி, மே 11- மூன்றே மாதத்தில் பழுதடைந்த கொள்ளிடம் ஆற்று வலது கரை சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் இருந்து குத்தவக்கரை, சரஸ்வதிவிளாகம், கொன்னக்காட்டு பாடுகை முதல் பனங்காட்டாங்குடி வரை 20 கிமீ தூரத்துக்கு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை நிரந்தரமாக மேம்படுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சாலையை நிரந்தரமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தற்காலிகமாக சரி செய்யும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.இதனால் சாலையின் சில இடங்களில் கருங்கல் ஜல்லிகள் மற்றும் செம்மண்ணும் கொட்டப்பட்டு பெயரளவில் சாலை அமைக்கப்பட்டது. தற்காலிகமாக சரி செய்யும் பணி முறையாக நடைபெறாததால் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், சிதறியும் கிடக்கின்றன. இதனால் இந்த ஆற்றங்கரை சாலையில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். முதலுக்கே மோசம் போனது போல் தற்காலிக சீரமைப்பு பெயரில் இச்சாலை மேலும் குண்டும், குழியுமாக மாறி கிடப்பதால் 20-க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேறு சாலை வழியாக கொள்ளிடம், சீர்காழி மற்றும் சிதம்பரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த காமராஜ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.