தஞ்சாவூர் மே.31-தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைக்கவும், ரயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீர், மழை நீரை அப்புறப்படுத்த முறையான வடிகால் வசதி அமைத்து தரக் கோரி அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாப்தீன் தலைமையில் அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் சாலை அமைக்க செயல் அலுவலர் எல்.ரமேஷ் மேற்பார்வையில் பேரூராட்சி பணி மேற்பார்வையாளர்(பொறியியல்) ராமலிங்கம் மற்றும் ஊழியர்கள் வியாழக்கிழமை சாலை அளவீடு மற்றும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஓரிரு நாளில் சாலைப் பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரித்து உயர் அதிகாரியின் ஒப்புதலுக்கு அனுப்ப இருப்பதாக பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.