தஞ்சாவூர் ஜூன்.28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கல்லூரணிக்காடு கிராமத்தில் கடந்த 1956 ஆம் ஆண்டு அரசால் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவில் க.பழனிவேல், க.செல்வராசு ஆகியோர் குடியிருந்து வருகின்றனர். அவர்களின் வீட்டிற்கு செல்லும் பாதை யை அடைத்தும், குடி தண்ணீர் குழாய் இணைப்பை தடுத்தும், மின்சார இணைப்பை அறுத்தும், அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் ரெங்கசாமி தொடர்ந்து இடையூறு செய்வதாகக் கூறி புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து ரெங்கசாமிக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க மறுக்கும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், காவல்துறையினர் ஆகியோரைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி செயலாளர் அரவிந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் உஞ்சை அரசன் முன்னிலை வகித்தார். முதன்மைச் செயலாளர் கோட்டை அரச மாணிக்கம், நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் இளந்தென்றல், திராவிடர் விடுதலைக் கழகம் திருவேங்கடம், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சலாம், இந்திய கம்யூனிஸ்ட் ராஜமாணிக்கம், சித்திரவேல் உள்பட 100 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து வரும் 5 ஆம் தேதிக்குள், இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் அளித்த உறுதிமொழியை ஏற்று, முற்றுகையை தற்காலிகமாக கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.