tamilnadu

ரூ.80 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமையாக்கப்பட்ட சிறுவன் மீட்பு: ஒருவர் மீது வழக்குப் பதிவு

தஞ்சாவூர், ஜூன் 12- 80 ஆயிரம் ரூபாய் கடனுக்காக 5 ஆண்டுகளாக கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்கப்பட்டான். தஞ்சாவூரை அடுத்த ஏழுப்பட்டியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். கடைசி மகன் சந்திரபோஸ் (15), பெற்றோர்கள் இருவரும் இறந்து விட்ட நிலையில், மூத்த சகோதரர் சரவணன், மற்ற சகோதரர்கள் வளர்ப்பில் இருந்துள்ளார்.  இந்நிலையில் பெற்றோர்கள் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளனர். பெற்றோர்கள் இறந்த பிறகு, கடன் கொடுத்த ரவி, சரவணனிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், சரவணன், தனது தம்பி சந்திரபோஸை கடனுக்காக ரவியிடம் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.  கடந்த 5 ஆண்டாக சந்திரபோஸ், ரவி வீட்டில் கொத்தடிமையாக ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டு, அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வல்லம் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தான்.  இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் உத்தரவின் பெயரில், சைல்டு லைன் இயக்குநர் பாத்திமா ராஜ், வல்லம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டனர். அதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட சிறுவனுக்கு செவ்வாய்க்கிழமை விடுதலை சான்றிதழ் வழங்கி, குழந்தை நல குழுமத்தில் ஒப்படைத்தனர். சிறுவனை கொத்தடிமையாக நடத்திய ரவி மீது வல்லம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.