tamilnadu

img

எஸ்.எம்.என். ஸ்போர்ட்ஸ் அகாடமியின் கோடைகால விளையாட்டு பயிற்சி நிறைவு

தஞ்சாவூர், மே 15-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த மே 1-ம் தேதி தொடங்கி 15 நாட்களாக நடந்து வந்தது. அதன் நிறைவு விழா புதன்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சி.கஜானாதேவி தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் எம்.சோலை வரவேற்றார். எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் கே.ஆர்.குகன், பாரத் பால் நிறுவன நிர்வாக இயக்குநர் கணேசன், வர்த்தக கழகப் பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தடகளம், வாலிபால், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சிகள், 3 வயது முதல் 18 வயது வரையிலான 85 மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இங்கு பயிற்சி பெற்ற 15 மாணவ, மாணவிகள் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகளாக கோடை காலத்தில் நடக்கும் இலவச பயிற்சியை, இனிவரும் காலங்களில் மாலை நேரங்களில் தினசரி வழங்க எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடமி முன்வந்துள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவி என்.நிஷா அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் கோபர்கான் ஷீரடியில் நடைபெற்ற 27-வது தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் துணை கேப்டனாக விளையாடி வெள்ளிப்பதக்கமும், கடந்த ஆண்டு கே.சம்யுக்தா என்ற மாணவி மிசோரம் மாநிலம் அய்ஸ்வால் என்ற இடத்தில் நடைபெற்ற 26-வது தேசிய வாலிபால் போட்டியில் விளையாடி வெள்ளிப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது. எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடமி கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி இலவசமாக விளையாட்டு பயிற்சி அளித்து வருகிறது.