திருச்சியில் உள்ள தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள மணிகண்டம் ஒன்றியத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இதில், தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த சிலையின் மீது காவி பூசப்பட்டு இருந்ததையும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததை கண்டி அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மணிகண்டம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த காவல்துறையினர் காவி சாயத்தையும், செருப்பு மாலையையும் அகற்றினார்கள்.
இதனை கண்டித்து, திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரியார் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.