tamilnadu

img

பணி நிரந்தரப்படுத்தக் கோரி மின் ஒப்பந்த ஊழியர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஜூலை.6- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) தஞ்சை மின் வட்டக்கிளை சார்பில், ஒப்பந்த ஊழியர்கள் வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தி விட்டு, தற்போது ஒப்பந்த ஊழியர்கள் இல்லை என பொய்யான அறிக்கை அனுப்புவதைக் கண்டித்தும், கேங்க் மேன் பதவியை ரத்து செய்ய வேண்டும். கஜா புயல் பணி மேற்கொண்ட ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சஙக தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டச்செயலாளர் பி.காணிக்கை ராஜ், மாவட்ட நிர்வாகிகள் சங்கர், அரிகேசவன், தேவேந்திரன், ரமே‌ஷ், சேக் அகமது உஸ்மான் உசேன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒப்பந்த ஊழியர் வளவராசு நன்றி கூறினார்.  கரூர்  கரூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் தனபால் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் உரையாற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.