திருச்சிராப்பள்ளி, ஜூலை 8- டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சியில் ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹேமந்த் பதானி நிருபர்களிடம் கூறும்போது: சங்கர் சிமெண்ட் நிறுவனம் நடத்தும் தமிழ்நாடு ப்ரிமியர் லீக் எனும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெறும் இந்த போட்டி ஆகஸ்டு 15 வரை நடைபெற உள்ளது. 32 போட்டிகளாக நடைபெறும் போட்டியில் மொத்தம் 153 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் திருச்சி, கோவை, மதுரை, சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 கோடி, 2 வது பரிசாக ரூ.60 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.40 லட்சம், நான்காவது பரிசாக ரூ.25 லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இளம்வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த தொடரின் மூலம் உள்ளூர் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இதன் மூலம் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைக்கும் என்றார்.