tamilnadu

img

தினக்கூலியாக ரூ.600 வழங்க விதைப்பண்ணை தொழிலாளர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, பிப்.10-  புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவிடுதி எண்ணெய்வித்து விதைப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் உள்ள தமிழ்நாடு அரசு எண்ணெய்வித்து விதைப்பண்ணை, 656 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பெற்று செயல்பட்டு வருகிறது.  இந்த பண்ணையில் வளச்சேரிப்பட்டி, சொக்கம்பேட்டை, வெள்ளாள விடுதி, சங்கம்விடுதி, குருவாண்டான் தெரு, கல்லாக்கோட்டை, மஞ்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 350 விவசாயத் தொழிலாளர்கள் தினக்கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இப்பண்ணைத் தொழிலாளர்களைக் கொண்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கிளை அமைப்புக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் கே.சித்திரைவேல், சிஐடியு நிர்வாகி கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேசினர்.  கூட்டத்தில், கிளைத் தலைவராக நா.துரைமாணிக்கம், செயலாளராக சி.ராஜேந்திரன், பொருளாளராக வி.மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலைசெய்யும் வெள்ளாளவிடுதி எண்ணெய்வித்து விதைப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலையை மாற்றி தினசரி வேலை கிடைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.