தஞ்சாவூர், மே 11-அரசு போக்குவரத்துக் கழக தஞ்சை பணிமனையில் சங்க நிர்வாகியை பழிவாங்கும் விதமாக அவரை பணி நீக்கம் செய்த தொழில்நுட்ப பிரிவு கோட்ட துணை மேலாளரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தஞ்சை விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சின்னையன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு, விரைவு போக்குவரத்து கழக மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் த.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் என்.குருசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் நிறைவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, பி.என்.பேர்நீதி ஆழ்வார், கே.வீரையன், அரசு போக்குவரத்து கழக சங்க நிர்வாகிகள் ராமசாமி, கண்ணன், ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் ஞானசேகரன், சிபிஎம் நகரக்குழு நசீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் கூறுகையில், "சிஐடியு மாவட்ட துணைச் செயலாளரும், அரசு விரைவு போக்குவரத்து கழக தஞ்சை பணிமனை தொழிற்சங்க தலைவர்களில் ஒருவருமான செங்குட்டுவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தொழில்நுட்ப பிரிவில் பணி புரியும் சிஐடியு செங்குட்டுவன் மீது, தொழில்நுட்ப பிரிவு கோட்ட துணை மேலாளர் வேண்டும் என்றே பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து, காழ்ப்புணர்ச்சி காரணமாக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.உடனடியாக போக்குவரத்துக் கழக நிர்வாகம் செங்குட்டுவன் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் ஒற்றுமையைக் கெடுக்கும் விதமாகவும், போக்குவரத்துக் கழக செயல்பாட்டிற்கு விரோதமாகவும் செயல்பட்ட, தொழில்நுட்ப பிரிவு கோட்ட துணை மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.