புதுக்கோட்டை, ஜூன் 4- தனது சகோதரி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை காதலித்து சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த சாதிவெறியர்கள் தலித் இளைஞரை கொலைவெறியுடன் தாக்கிய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில் நடந்தது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.ஜீவானந்தம், செயலாளர் சி.அன்புமணவாளன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் சீனிவாசன். தலித் வகுப்பைச் சேர்ந்தவர். குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரி விஜயலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்து இளைஞரை காதலித்து கடந்த ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளார். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த சாதி வெறியர்கள் சீனிவாசன் குடும்பத்தினர் மீது தொடர்ந்து வன்மத்தை கடைப்பிடித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சாதிவெறியர்கள் சீனிவாசன் மீது கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சீனிவாசனின் சகோதரி காதலித்து சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதே காரணம் என சீன்வாசனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.படுகாயமடைந்த சீனிவாசன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரனூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேற்படி தாக்குதலுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தாக்குதல் தொடுத்த நபர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புலியூர் பகுதியில் வாழும் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.