tamilnadu

அதி தீவிர புயலாக மாறிய பானி புயலால் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப்.30-தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பானி புயல் மேலும் வலுவடைந்து, அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும் இதனால் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.பானி புயல் செவ்வாய்க்கிழமையன்று சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ தொலைவில் மையம் கொண்டது. 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. புதன்கிழமை மாலை வடதமிழகம்-தெற்கு ஆந்திரக் கடற்கரை அருகில் 300 கி.மீ. தொலைவு வரை வந்து, அதன்பிறகு, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், ஃபானி புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னைக்கு 575 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. குமரி, மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோர கடற்பகுதிகளில் காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்திலும், சமயத்தில் 50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.மீனவர்கள் இன்று (புதன்) தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

;