ஆசிரியர் தினப் போட்டிகள்
திருச்சிராப்பள்ளி, செப்,6- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கான சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. இதில் 5 வயது முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வும், நானும் என்ற தலைப்பிலும், 9 வயது முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நான் விரும்பும் வகுப்பறை என்ற தலைப்பிலும், பள்ளி ஆசிரியர்கள் என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது என்ற தலைப்பிலும், ஆர்வலர்கள் அரசுப் பள்ளிகள் இணைப்பும் அடைப்பும் என்ற தலைப்பில் கட்டுரை ஏ4 அளவு தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் நின்னா தேர்வு, நடந்தா தேர்வு என்ற தலைப்பில் 20 வரிக்கு மிகாமல் கவிதையும், கல்வி என்ற தலைப்பில் சிறுகதை ஏ4 அளவு தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு பிரிவில் ஒரு படைப்பு மட்டுமே அனுப்ப வேண்டும். படைப்புகள் செப்.13-ம் தேதிக்கு முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கதை, கவிதை, கட்டுரைகளை சிவ.வெங்கடேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள் 2019, அழகின் சிரிப்பு, 23, ஆனிவீதி, செல்வநகர் விஸ்தரிப்பு, பென்னகர், திருச்சிராப்பள்ளி-620001 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்களுக்கு 88705-24977 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் வளர்ச்சி நிதியளிப்பு
அரியலூர், செப்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி அளிப்பு விழா, பொதுக்கூட்டம் கிளைச் செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் அரியலூர் மாவட்டம் த.பழூர் ஒன்றியம் கருப்பூர் ஊராட்சியில் நடைபெற்றது. கலியபெருமாள், பவானி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்டச் செயலாளர் மணிவேல், மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.பழனிவேல், டி.செல்வராஜ், ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 20 ஆயிரத்து 521 ரூபாய் கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது.
கோயில் கோபுரத்தை சீர் செய்யக் கோரிக்கை
கும்பகோணம் செப்.6- கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள துர்க்கையம்மன் பிரசித்தி பெற்றதால் தினம்தோறும் அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோயில் கோபுரங்களில் வர்ணம் பூசப்பட்டு, சுதை சிற்பங்களை சீர் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கும்பாபிஷேகம் முடிந்து 2 ஆண்டுகளே ஆன நிலையில் கோயில் நிர்வாகம் பராமரிக்காததால் கோயில் கோபுரங்களில் செடி, கொடி, மரங்கள் முளைத்துள்ளன. எனவே கோயில் கோபுரத்தில் முளைத்துள்ள மரம்,செடி, கொடிகளை விரைந்து அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளம்பெண் மர்ம மரணம் உறவினர்கள் மறியல்
கும்பகோணம் செப்.6- தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் ஒன்றியம் உத்திரை கிராமத்தில் வசிப்பவர் வடிவேல்- கோமதி. இவர்களது மகன் கண்ணன் என்பவருக்கும், கும்பகோணம் அடுத்துள்ள மேலக்கோட்டையூர் சேர்ந்த சுப்பிரமணியன்- சித்ரா ஆகியோர் மகள் ரேகா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜனா என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பத்தன்று கணவன்- மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து ரேகா, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையறிந்த ரேகாவின் தந்தை, தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், கண்ணன் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமையால் தற்கொலையோ அல்லது கொலையோ செய்திருக்கலாம். எனவே கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தாரை விசாரிக்க காவல்துறையிடம் புகார் அளித்தார். மேலும் ரேகாவின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை செய்து வேண்டுமென சாலை மறியலில் உறவினர்கள் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் மாவட்ட குழு உறுப்பினர் சி.நாகராஜன் ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முல்லை வளவன் ஆகியோர் திருமணமான இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் ரேகாவின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து சாலை மறியலில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் ஆர்டிஓ விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஜூஸ் பாக்கெட்டில் கள்ளச் சாராயம் விற்பனை : நான்கு பேர் கைது
கும்பகோணம், செப்.6- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுன் உதய நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் தயாரித்து, அதை பாண்டி ஜூஸ் என அச்சடிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் நிரப்பி, ‘ஜூஸ்’ என்ற பெயரில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் விற்பனை செய்வதாக கும்பகோணம் தாலுகா காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அங்கு சோதனை செய்த போது ஜூஸ் பாக்கெட்டில் உள்ளது சாராயம் தான் என உறுதி செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜ், ரபிக், சாந்தா, செல்வி ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், புதுச்சேரியில் இருந்து ஸ்பிரிட் எனப்படும் எரி சாராயத்தை வாங்கி வந்து, அதில் தண்ணீரைக் கலந்து கள்ளச்சாராயம் தயார் செய்து, 150, 200 மில்லி என்ற அளவில் ஜூஸ் பாக்கெட்டுகளில் அடைத்து பேக் செய்து கடந்த 6 மாதமாக விற்பனை செய்தது தெரிந்தது.
முட்புதர் சூழ்ந்து கிடக்கும் அரசுக் கட்டடம்
, செப்.6- நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புத்தூரில், ஊராட்சிக்கு சொந்தமான சேவை மையக் கட்டிடம் உள்ளது. ஊராட்சி சம்பந்தமான அனைத்து கூட்டங்களும், மகளிர் குழுக் கூட்டங்களும், இந்த சேவை மையக் ஆவணங்களும், பதிவேடுகளும் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் இடமாகவும் இந்த சேவை மையக் கட்டிடம் இருந்து வருகிறது. இந்த சேவை கட்டிடத்தைச் சுற்றி மிகவும் அடர்த்தியாக நெய்வேலி காட்டாணக்கு செடிகள் நீண்டு வளர்ந்துள்ளன. இந்த அடர்ந்த செடிகள் உள்ள கட்டிடத்திற்குள் பாம்பு மற்றும் விஷ பூச்சிகளும் இருந்து வருகின்றன. எனவே கட்டிடத்திற்குள் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வரும் செடிகளை அகற்றவும் சுற்றுப்புறச் சுகாதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.