லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒருவர் பலி ,14 பேர் படுகாயம்
அரியலூர், மே 29-சென்னையில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் நோக்கிசெவ்வாயன்று இரவு வந்த அரசு பேருந்து, கும்பகோணம் சாலை காரைகுறிச்சி கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரிமீது மோதியதில் 14 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகாயமடைந்த 14 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மேல் சிகிச்சைக்காக 8 பேர் தஞ்சை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், போக்குவரத்து ஆர்டிஓ சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மணிவேல், விவசாயத் தொழிலாளர்சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டப் பொருளாளர் உத்திராபதி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
கத்தி முனையில் நகை கொள்ளை
புதுக்கோட்டை, மே 29-புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராசு மகன் குழந்தைநாடியான். இவரது மனைவி சத்யா(35). இருவரும் கொத்தமங்கலத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு கடந்த திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பினர். இருவரும் மரமடக்கி கிராமத்தின் வாழைத்தோப்புகளுக்கு இடையே உள்ள பாதையில் வந்துகொண்டிருந்த போது, இவர்களுக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த 4 பேர் திடீரென இவர்கள் முன்வந்துமறித்துள்ளனர். பின்னர், குழந்தைநாடியான், சத்யா இருவரின் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி கழுத்தில் கிடந்தசங்கிலி, தோடு, கொழுசு, செல்போன், பையில் வைத்திருந்தஆயிரம் ரூபாய் பணம் என அவர்கள் வைத்திருந்த அனைத்தையும் பறித்து கொண்டு சென்றுவிட்டனர்.
டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2.50 லட்சம் கொள்ளை
தஞ்சாவூர், மே 29-தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள தென்னஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர்மாதவன் (40). இவர் பாபநாசம் அருகே உள்ள வழுத்தூர்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு டாஸ்மாக் கடையில் பணியைமுடித்துவிட்டு, விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.2 லட்சத்து50 ஆயிரம் தொகையை எடுத்து கொண்டு டூவீலரில் வீட்டுக்குபுறப்பட்டு சென்று கொண்டிருந்தார். திருக்கருகாவூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் பேருந்து நிலையம் அருகே வந்த போது இவரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மாதவன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவரை அரிவாளால்வெட்டி விட்டு வண்டியில் வைத்திருந்த பணப்பையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். மர்ம நபர்கள் வெட்டியதில் காயமடைந்த மாதவன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மெலட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 பவுன் நகை கொள்ளை
கரூர், மே 29 -கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட வீரணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(85). கடந்த மே 26-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலையாக கோவைக்கு சென்று உள்ளார். பணி முடித்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய போது, வீட்டின் கதவில்இருந்த பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் பீரோவில் இருந்த10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து முத்துச்சாமி சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தாறுமாறாக ஓடிய லாரி: ஒருவர் பலி
கரூர், மே 29-கரூர் மாவட்டம் மாயனூர் காவல் சரகத்திற்கு உட்பட்டமாயனூர் காசா காலனி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(47). கரூர் - திருச்சி சாலையில் கரூரில் இருந்து திருச்சிநோக்கி சென்ற டிப்பர் லாரி, மாயனூர் பேருந்து நிறுத்தம்அருகே திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த கார் மீது எதிர்பாராமல் மோதியது.இந்த சம்பவத்திற்கு பிறகும் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பேருந்து நிறுத்தம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அதன் அருகில் நின்றுகொண்டிருந்த தங்கராஜ் மீது மோதியது. இதில் தங்கராஜ்உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.