tamilnadu

img

பழைய மென்பொருளிலேயே சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஜூன்.7- ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் இல்லை என மிரட்டும் போக்கை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சார்நிலை கருவூலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாமல் அவசரகதியில் நடைமுறைப்படுத்தப்படும் மின்னணு சம்பள முறையினால் அரசு ஊழியர் பாதிக்கப்படுவதால், புதிய மென்பொருள் தயாராகும் வரை பழைய மென்பொருளிலேயே சம்பளப் பட்டியல் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் உணவு இடைவேளை நேரத்திலும் மாலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூரில் சார்நிலைக் கருவூலம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க வடக்கு வட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தெற்கு வட்டச் செயலாளர் பாஸ்கரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினார். வட்ட துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார். மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் கோதண்டபாணி, கிராம நிர்வாக அலுவலர் சங்க வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி

பேராவூரணியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அ.நாவலரசன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ஜெ.ராஜசேகரன், கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.க.தங்கராசு, சத்துணவு ஊழியர் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் எஸ்.பரசுராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் விஜயா நன்றி கூறினார். 17 பெண்கள் உள்ளிட்ட 38 பேர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.