திண்டுக்கல்:
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை விட கூடுதலாக 2 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து திமுக வேட்பாளரின் வழக்கறிஞர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
நிலக்கோட்டை தொகுதியில் பதிவான வாக்குகள் 1 லட்சத்து 80 ஆயிரத்து 598.ஆனால் 19-வது சுற்று முடிந்ததும் வாக்குகள் எண்ணியதில் மொத்த வாக்குகளாக 1 லட்சத்து 82 ஆயிரத்து 967 வந்தன. இதனால் வாக்குகளின் கணக்கு சமன் செய்ய முடியவில்லை. இந்நிலையில் பதிவான வாக்குகளை விட கூடுதலாக வாக்குகள் எப்படி வந்தது என்று திமுக வேட்பாளர் சௌந்திரபாண்டியின் வழக்கறிஞர், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பார்வையாளர்களிடம் புகார்கொடுத்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமல்ல, அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 7-வது சுற்று முடிந்து செய்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டியலில் 2 ஆயிரம் வாக்குகள் அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகர் கணக்கில் கூடியதால் செய்தியாளர்களும் சந்தேகமடைந்தனர். அதிகாரிகளிடமும் குழப்பம் நீடித்தது.