திண்டுக்கல்:
பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சிவகிரிப்பட்டி. இதன் ஊராட்சித் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த சுப்புலெட்சுமி உள்ளார், ஆயுத பூஜையையெட்டி நாளிதழ் ஒன்றுக்கு ஊராட்சி சார்பில் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தலைவரின் பெயர் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு திண்டுக்கல் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி, மாவட்டத் தலைவர் டி.முத்துச்சாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செவ்வாயன்று அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:-
ஆயுத பூஜையை முன்னிட்டு தினசரி பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்த விளம்பரத்தில் சிவகிரிப்பட்டி ஊராட்சித்தலைவர் சுப்புலட்சுமியின் பெயர் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தலித் ஊராட்சித்தலைவர் சுப்புலட்சுமியின் பெயரை ஏன் வெளியிடவில்லை? என்ற கேள்வி எழும் என்பதற்காக துணைத்தலைவர் பிருந்தா மாரியப்பன் பெயரும் இடம்பெறவில்லை என்று கூறுவதற்காக அவர் பெயரும் இடம்பெறவில்லை. ஆனால் மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. ஊராட்சி செயலாளர் சிவசங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலையான், நாகராஜன் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இது அப்பட்டமான தீண்டாமைக்கொடுமை. தலித் ஊராட்சித்தலைவர் சுப்புலட்சுமி பெயர் இடம்பெறும் வகையில் மீண்டும் விளம்பரத்தை வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர், உயரதிகாரிகள் மற்றும் சிவகிரிபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.