திண்டுக்கல்;
மத்திய பாஜக அரசின் தமிழக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மாநில சிறப்பு மாநாட்டை அக்டோபர் 27 ஆம் தேதி காணொலி மூலமாக நடத்தப்படுகிறது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா செய்தியாளர்களிடம் கூறிய தாவது:வடமதுரையில் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் மகிளா நீதிமன்றம் கொலையாளியை விடுவித்ததைக் கண்டித்தும் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வடமதுரையில் வாலிபர் சங்கம் போராட்டத்தை நடத்தியது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்
மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஜி.எஸ்.டி.பங்குத்தொகை வழங்கப்படவில்லை. மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. தமிழக பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி, ஆங்கிலத்திலும் மட்டுமே பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது. வேலை வாய்ப்பில் மத்திய ரிசர்வ் படையில் துணை மருத்துவ பணிகளுக்கான தேர்வு மையங்களை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அமைக்காமல் மிகப் பெரிய துரோகத்தை மோடி அரசு செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் இத்தகைய தமிழக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழக மக்களின் உரிமைகளுக்காக தமிழக இளைஞர்களின் எதிர்காலத்திற்காக மாநில அளவிலான மாநில சிறப்பு மாநாட்டை அக்டோபர் 27 ஆம் தேதி காணொலி மூலமாக நடத்த உள்ளோம். தமிழக உரிமையை பாதுகாப்போம், தமிழக நலன்களை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கூறினார். பேட்டியின் போது மாநிலத்தலை வர் ரெஜிஸ்குமார், மாநில துணைச் செயலாளர் பாலச்சந்திரபோஸ், மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.பாலாஜி, விஷ்ணுவர்த்தன் ஆகியோர் உடனிருந்தனர்.