திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் கறிக்கோழி பண்ணையாளர்கள் நவ.1ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் தீபாவளி சமயத்தில் கோழி உற்பத்தியை நிறுத்த உள்ளனர்.ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஒரு கிலோ கறிக்கோழிக்கு ரூ.4 உற்பத்திச் செலவு நிர்ணயித்து பெறப்பட்டு வந்தது. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இந்த காலத்தில் அனைத்து விலைகளும் அதிகரித்து உள்ள நிலையில் கோழி நிறுவனங்களுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லாத நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோழி உற்பத்தியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்து கம்பெனிகளிட மிருந்து கோழியை இறக்குமதி செய்வதை நிறுத்தி உள்ளனர். 1ஆம் தேதி முதல் கறிக்கோழிகளை கம்பெனி நிறுவனங்களுக்கு வாகனங்களில் ஏற்றுவதையும் நிறுத்த உள்ளனர்.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கறிக்கோழி பண்ணையாளர்கள் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரபீக் கூறும்போது, எங்கள் பண்ணைகளில் ஒரு கிலோவுக்கு ரூ.12 செலவு செய்து கோழியை வளர்க்கிறோம். கோழி நிறுவனங்கள் எங்களுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை தான் கொடுக்கிறார்கள். கோழி நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. இதன் காரணமாக கோழி பண்ணையாளர்கள் ஏராளமானவர்கள் நஷ்டமடைந்து இந்த தொழிலை விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். இப்போது வங்கிக்கடன்களை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகையினால்வருகிற நவ.1ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். கோழி வளர்ப்பதற்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.12 கொடுத்தால் கோழி நிறுவனங்களின் வாகனங்களில் கோழிகளை ஏற்றுவோம். இல்லையெனில ஏற்றமாட்டோம். துமிழ்நாடு முழுவதும் கோழிக்கறி தட்டுப்பாடு ஏற்படும். ஆட்டுக்கறியின் விலை ஒரு கிலோ ரூ.1200 முதல் ரூ.2 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது. கோழிக்கறியும் கூட ரூபாய் ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது. தமிழகத்தில்உள்ள 6 கோடி மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். ஆனால் இது 30 லட்சம் கோழிபண்ணையாளர்களின் வாழ்வாதார பிரச்சனையாக உள்ளது. காய்கறிகளின் விலையும் உயர்ந்து அரசாங்கத்திற்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தும்.
கோழி நிறுவனங்களின் மெத்தனப் போக்கின் காரணமாகத் தான் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. இதற்கு சுமூக தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் அரசாங்கமும், கோழி நிறுவனங்களும் சேர்ந்து ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும். எங்களுக்கு தீர்வுகிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் ஒரு போராட்டக்குழுவை அமைத்திருக்கிறார்கள் என்றார். பாதுகாப்பு கோரி கறிக்கோழி பண்ணையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர்.