பென்னாகரம், மே 4-குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்டு நான்கு ஆண்டுகளாக போடப்படாத சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி 13 ஆவது வார்டில் உள்ள லாடக்காரர் தெருவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக குழாய் அமைக்கும் பணிக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த பிறகும் இந்த சாலைகள் மீண்டும் போடப்படாததால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு செல்வோர் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவிற்கு பெரும் அவதிக்கு ஆளாகிவருகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.அதேபோல் இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சாக்கடை கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாததால் சாலையிலேயே சாக்கடை செல்லும் அவல நிலையும் உள்ளது. மழைக்காலங்களில் சாக்கடைநீர் தெருக்களிலும் வீடுகளிலும் செல்லக் கூடிய நிலை உள்ளது. எனவே முறையாக சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.