தருமபுரி, செப்.16- தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், பறைப்பட்டி புதூர் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட கோபிநாதம்பட்டி கூட்டுசாலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மருத்துவமனைகள், வணிக நிறு வனங்கள், கடைகள் உள்ளன. கோபிநாதம்பட்டி கூட்டுசாலை வழியாக எச்.கோபிநாதம்பட்டி, கொக்கராப்பட்டி, பறையப்பட்டி புதூர் ஆகிய பகுதிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்தின் குழாய் இணைப்புகள் செல்கிறது. ஆனால், கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் உள்ள குடியிருப்புகளுக்கு மட்டும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைப்பதில்லையாம். இதனால் இங்குள்ள மக்கள் நாள்தோறும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் 3 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக ளுக்கும் குழாய் இணைப்புகளை ஏற்படுத்தி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.