tamilnadu

தருமபுரி: மறுவாக்குப் பதிவுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்வு

தருமபுரி, மே 15-பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் டி.அய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிப்புதூர் ஆகிய இடங்களில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் மே 19 ஆம்தேதியன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல்களுக்கான மறுவாக்குப் பதிவு நடைபெறும் 8 வாக்குச் சாவடிகளிலும் 16 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதேபோல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், மாற்று தேவைக்காக 16 மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. தேர்தல் அலுவலரும், தருமபுரி மாவட்ட ஆட்சியருமான எஸ்.மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா ராணி, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.சுகுமார் ஆகியோர் முன்னிலையில், இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.