tamilnadu

img

எலவடையில் கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம்

  தருமபுரி , ஏப். 23-   மொரப்பூர் அருகேயுள்ள எலவடை கிராமத்தில் கொரோனா நோய்த் தொற்று குறித்த சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.   தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள எலவடை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர், சேலம் மாவட்டம், சங்ககிரியில் தங்கி, அங்கிருந்து லாரியில் ஒசூர்-மதுரைக்கு காய்கறி சுமை ஏற்றிச் சென்று வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அந்த லாரி ஓட்டுநருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல், அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி, அவர்களது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இந்த நிலையில், லாரி ஓட்டுநர் தங்கியிருந்த எலவடை கிராமத்தில் அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்கள், பொதுமக்கள் யாருக்கேனும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை மேற்கொண்டனர்.

  மொரப்பூர்-கம்பைநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் எலவடை கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தார் சாலைகளில் தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எலவடை கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் கொசப்பட்டி ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அரூர் பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து டிராக்டர் மூலம் கிரிமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.    இந்நிலையில் கொசப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட எலவடை கிராமத்தில் நடைபெறும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிககைகள், மருத்துவ வசதிகள், கிராம மக்களுக்கு தேவையான குடிநீர், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இதில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன், அரூர் சார்-ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பீ.ஆர்.ஜெமினி, மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பிரிவு திட்ட அலுவலர் ஏ.கே.பாலசுந்தரம், அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.