தருமபுரி, மே. 4 -
தருமபுரி அருகே வத்தல் மலையில் கள்ளச்சாராயம் குடித்த விவசாயி ஒருவர் பலியானார். மற்றொருவருக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம் கொண்டகரஹள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்டது வத்தல்மலை கிராமம். இங்கு பெரியூர், நாய்க்கனூர், மண்ணாங்குழி, பால்சிலம்பு, ஒன்றிக்காடு, சின்னாங்காடு, கொட்டலாங்காடு, குள்ளனூர் என 8 மலைக் கிராமங்கள் உள்ளது. இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் விவசாயமாகும். இங்கு ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி வந்துள்ளனர். இந்நிலையில் கொட்டங்காடு பகுதியைச் சேர்ந்த காளியின் மகன் குமார் (44), ராமசாமியின் மகன் மாணிக்கம் (45) ஆகிய இருவரும் ஞாயிறன்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பரமசிவம் என்பவரிடம் கள்ளச்சாராயம் பெற்று குடித்துள்ளனர். குடித்தவுடனேயே அவர்கள் பலாசுளைகள் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவரும் வாந்தி எடுத்து அங்கேயே மயங்கி உள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணிக்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இகுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.